கோவை: கோவையில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கணவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை சாய்பாபாகாலனி பகுதியை சேர்ந்தவர் ராஜாராம்(53). பிஎஸ்என்எல் ஊழியராக இருந்தவர். இவரின் மனைவி உஷாராணி. இவர்களுக்கு கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர்களுக்கு தீபன் என்ற மகன் உள்ளார். ராஜாராம் குடிபோதைக்கு அடிமையாகி இருந்துள்ளார். குடித்து விட்டு தினமும் மனைவியை அடித்து வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதம் 18-ம் தேதி குடித்துவிட்டு ராஜாராம் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, கணவன், மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், இரவு முழுவதும் மனைவியை அடித்து சித்ரவதை செய்துள்ளார். இதனால், வாழ்க்கையில் விரக்தி அடைந்த உஷாராணி மறுநாள் காலையில் சாணிபவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சாய்பாபாகாலனி போலீசார் விசாரணை நடத்தி ராஜாராம் மீது தற்கொலைக்கு தூண்டுதல், மனைவியை கொடுமைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி நந்தினி தேவி நேற்று தீர்ப்பளித்தார். மனைவியை தற்கொலைக்கு தூண்டியதற்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருந்தார். மனைவியை கொடுமைப்படுத்தியதற்காக 2 ஆண்டு சிறையும், ரூ.500 அபராதமும், அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதையடுத்து, ராஜாராம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.