சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

கலபுரகி: கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா சங்கலங்கி கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா (30). இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அவர் அந்த பகுதியை சேர்ந்த சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார். பின்னர் மரகொளா கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடத்தி சென்று சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார்.மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுமியை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், சிறுமி கற்பழிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து நரோனா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை கற்பழித்த நாகப்பாவை கைது செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை மாவட்ட சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடைபெற்றது. வழக்கை விசாரித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அதில் சிறுமியை கடத்தி சென்று பலாத்காரம் செய்தது நிரூபிக்கப்பட்டதால், தொழிலாளி நாகப்பாவுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.