பூதப்பாண்டியில் மீண்டும் அட்டகாசம்: 500 வாழைகளை துவம்சம் செய்த யானை கூட்டம்

பூதப்பாண்டி: பூதப்பாண்டி அருகே இன்று காலை யானை கூட்டம் 500 வாழைகளை துவம்சம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூதப்பாண்டியை அடுத்த தெள்ளாந்தி பகுதியை சேர்ந்தவர் ராஜா. விவசாயி. தாடகை மலை அடிவாரத்தில் உள்ள உடையார்கோணம் பகுதியில் சுமார் 1.5 ஏக்கர் நிலப்பரப்பில் 1200 வாழைகளை நட்டு வந்தார். கடந்த ஜூன் மாதம் அவரது தோட்டத்தில் புகுந்த யானை கூட்டம் 700 வாழை மரங்களை பிடிங்கி நாசமாகிவிட்டு சென்றது.

இதுகுறித்து ராஜா வனத்துறை, வேளாண்துறை, வருவாய்துறைகளிடம் நிவாரணம் கேட்டு மனு அளித்தார். ஆனால் இதுவரையும் நிவாரணம் கிடைக்கவில்லை. வனத்துறை சார்பில் யானைகள் வராமல் இருக்க தடுப்பு அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்தனர். ஆனால் வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இந்த நிலையில் யானை அழித்தது போக மீதமுள்ள 500 வாழை மரங்களை ராஜா பராமரித்து வந்தார்.

குலை தள்ளிய நிலையில் காணப்பட்ட இந்த வாழை மரங்கள், இன்னும் 25 நாளில் முழு பலன் அளிக்கும் வகையில் இருந்தது. நேற்று இரவு அவரது தோட்டத்தில் புகுந்து யானை கூட்டம் 500 வாழை மரங்களையும் பிடுங்கி நாசம் செய்துவிட்டு காட்டுக்குள் சென்றுவிட்டது. இன்று காலை வழக்கம்போல் வாழைக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற ராஜா, யானை கூட்டத்தால் வாழைகள் பிடுங்கி ஏறியப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதனால் அவருக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.  தொடர்ந்து கவலையில் கண்ணீர் வடித்தார். வழக்காக ஜூன், ஜூலை மாதங்களில் ஊருக்குள் புகும் யானை கூட்டம், தற்போது செப்டம்பர் மாதத்திலேயே மீண்டும் அட்டகாசத்தை தொடங்கியுள்ளது. இது விவசாயிகளை மேலும் கவலையடைய செய்துள்ளது. இந்த சம்பவத்தால் பூதப்பாண்டி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.