மழையின் அளவு படிப்படியாக குறையும் 3 மாவட்டத்திற்கு மட்டும் மஞ்சள் எச்சரிக்கை| Dinamalar

பெங்களூரு : ‘கர்நாடகாவின் கடலோரம், மலைப்பகுதி மாவட்டங்களை தவிர, மற்ற இடங்களில் மழையின் அளவு, படிப்படியாக குறையும்’ என வானிலை மையம் தெரிவித்துள்ளது. உத்தரகன்னடா, உடுப்பி, தட்சிண கன்னடா மாவட்டங்களில், ‘மஞ்சள் எச்சரிக்கை’ அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், மழை நீடிக்கிறது. ஆறுகள், அணைகள், ஏரிகளில் நீர் அபாய கட்டத்தை தாண்டி ஓடுகிறது. பல இடங்களில் வீடுகள் இடிந்துள்ளன.பெலகாவி நகர் உட்பட மாவட்டம் முழுதும் கனமழை பெய்கிறது. கிருஷ்ணா ஆறு, துணை ஆறுகள், மல்லப்பிரபா, ஹிரண்யகேசி, மார்கண்டேயா ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி தண்ணீர் ஓடுகிறது. கட்டபிரபா, மல்லபிரபா அணைகளில் இருந்து பெருமளவில் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதன் விளைவாக ஆறுகளில், வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.

ஆற்றங்கரையில் வசிக்கும் கிராமங்களின் மக்கள், வீட்டை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.பெலகாவியில் மார்கண்டேயா, பல்லாரி கால்வாய்களில் வெள்ளம் பாய்கிறது. அக்கம், பக்கத்து விளை நிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது. குடகின், மடிகேரியில் மழை நீடிக்கிறது.வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட அறிக்கை:உத்தரகன்னடா, உடுப்பி, தட்சிண கன்னட மாவட்டங்களில், கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு, ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஷிவமொகா, சிக்கமகளூரு, குடகு, ஹாசன், பெலகாவி, கலபுரகி மாவட்டங்களிலும் மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.