உங்கள் கனவு நிறைவேறிவிட்டது : சாச்சியின் மனைவி நெகிழ்ச்சி

கடந்த 2020ம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று டில்லியில் நடைபெற்றது. ஜனாதிபதி திரவுபதி முர்மூ அவர்கள் கையால் சாதனையாளர்கள் அனைவரும் விருது பெற்றனர். இந்த விருது வழங்கும் நிகழ்வில் ஹைலைட்டாக அமைந்தது அய்யப்பனும் கோஷியும் என்கிற படத்தில் இடம்பெற்ற கலக்காத்தா சந்திரமேரா என்கிற பாடலை பாடிய நாட்டுப்புற பாடகி நஞ்சம்மா விருது பெற்றபோது அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றுதுதான்.

குறிப்பாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த, இன்று மிக உயரிய பதவி வகிக்கும் ஜனாதிபதியின் கைகளால் மிக உயரிய விருதான தேசிய விருதை இன்னொரு பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பெற்றது நெகிழ்ச்சியான நிகழ்வாக அனைவராலும் பாராட்டப் பெற்று வருகிறது. இந்த நிலையில் அய்யப்பனும் கோஷியும் படத்தை இயக்கிய மறைந்த இயக்குனர் சாச்சியின் மனைவி ஷிஜி, இந்த படத்தின் சிறந்த இயக்குனருக்கான விருதை தனது கணவருக்கு பதிலாக பெற்றுக்கொண்டார்.

இந்த நிகழ்வு பற்றி ஷிஜி கூறும்போது, “இதற்கு தானே ஆசைப்பட்டீர்கள் சாச்சி.. எப்படியும் ஒருநாள் தேசிய விருது பெறும் நிகழ்வில் ஜனாதிபதி உடனான விருந்தில் நாம் இருப்போம் என்று கூறினீர்கள்.. இன்று அது நடந்து விட்டது. அதேபோல நாட்டுப்புற பாடகி நஞ்சம்மா மிகப்பெரிய கவுரவத்தை பெற வேண்டும், உலகம் முழுவதும் அறியப் படவேண்டும் என்று விரும்பினீர்கள். அதுவும் இன்று நடந்துவிட்டது.. ஆனால் அதை பார்ப்பதற்கு இன்று நீங்கள் இல்லையே” என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.