மும்பை விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது – ரூ.80 கோடி மதிப்புள்ள 16 கிலோ ஹெராயின் பறிமுதல்

மும்பை,

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் வைத்திருந்த நபரை வருவாய் புலனாய்வு இயக்குனரக (டிஆர்ஐ) அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடமிருந்து 16 கிலோ உயர்தர ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சர்வதேச சந்தையில் ரூ.80 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று டிஆர்ஐ தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் கேரளாவைச் சேர்ந்த பினு ஜான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். டிஆர்ஐ அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், பினு ஜான் விமான நிலையத்தை அடைந்ததும், அவரைத் தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது டிராலி பையில் இருந்த போலியான ஒரு குழியிலிருந்து (Fake Cavity) போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் டிஆர்ஐ அதிகாரிகள் மேற்கொண்ட விசாணையில் வெளிநாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல கமிஷனாக ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்ததாகக் கூறினார். மேலும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களையும் ஜான் கூறியுள்ளார். ஜான் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ள அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.