திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு.! நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து.!

திமுக தலைவராக மு.க. ஸ்டாலின் இன்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக-வின் 15வது பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்குழு கூட்டத்தில், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதற்காக செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் பிரமாண்ட விழா ஏற்பாடுகளும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் மீண்டும் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

அவர்களை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யாததால் இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் 3 பேரும் ஒருமனதாக இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன்படி, திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வாகினார். 

மேலும், திமுக பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டதை உட்கட்சி தேர்தல் ஆணையர் ஆற்காடு வீராசாமி அறிவித்தார்.

இதையடுத்து திமுக தலைவராக தேர்வான மு.க.ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.