சென்னை: சிஎம்டிஏ எல்லையை 5904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற்றது.
சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் பரப்பளவு தற்போது 1,189 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில் சென்னை மாநகராட்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 16 நகராட்சிகள், 20 பேரூராட்சிகள் உள்ளன. இந்நிலையில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் எல்லை விரிவாக்கம் செய்யப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தமிழக அரசு அறிவித்தது.
இதன்படி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, அரக்கோணத்தின் ஒரு பகுதியையும் சேர்த்து, சென்னை பெருநகர பகுதி 8,878 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டங்கள் நடைபெற்றன.
சென்னை பெருநகர் பகுதி விரிவாக்க திட்டத்தை 8,878 ச.கி.மீட்டலிருந்து 5904 ச.கி.மீட்டராக குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டும் சென்னை பெருநகர் பகுதிகள் வரும் வகையில் வரிவாக்க திட்டம் தயார் செய்யப்பட்டது. அரக்கோணத்தின் ஒரு பகுதியை சேர்க்கும் திட்டம் கைவிடப்பட்டது.
இது தொடர்பாக நேற்று (அக்.10) ஆய்வுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்நிலையில், இன்று (அக்.11) முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் வரும் நாட்களில் பெருநகர் எல்லை விரிவாக்கம் தொடர்பான அரசாணை வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.