திமுக தலைவராக ஸ்டாலின் பேச்சு… அமைச்சர் பொன்முடி புது விளக்கம்!

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 9) சென்னையில் நடைபெற்றது. இதில் தொடர்ந்து இரண்டாவது முறையாக கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலின் பேசும்போது, ” தினமும் காலை கண்விழிக்கும்போது நம்மவர்கள் (திமுக நிர்வாகிகள்) யாரும் இன்று புது பிரச்னைகள் எதையும் உருவாக்கி இருக்ககூடாதே என்ற எண்ணத்துடன்தான் கண் விழிக்கிறேன். இந்த எண்ணமே சமயத்தில் தம்மை தூங்கவிடாமல்கூட செய்துவிடுகிறது” என்று பேசியிருந்தார்.

பொது இடங்களில் தங்களது சர்ச்சையான பேச்சுகள், செயல்பாடுகளால் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவரும் மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ.ஆர். ராமச்சந்திரன், பொன்முடி போன்றவர்களை மனதில் வைத்துதான் ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பதாக அரசியல் அரங்கில் பரவலாக புரிந்து கொள்ளப்பட்டது.

இதுதான் சாக்கு என, ‘திமுக நிர்வாகிகளான மூத்த அமைச்சர்கள் சிலரை மனதில் வைத்துதான் ஸ்டாலின் இப்படி பேசியிருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் காட்டாட்சி நடைபெற்று வருகிறது என்பதை முதல்வரே ஒபபுக் கொண்டுள்ளார்’ என்று தமிழக பாஜக விமர்சித்துள்ளது.

‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, விடிந்தால் நமக்கு அமைச்சர் பதவி இருக்குமோ என்ற பயத்தில் அதிமுக அமைச்சர்கள்தான் தூக்கம் தொலைத்து இருந்தனர். ஆனால், தற்போதைய முதல்வர் ஸ்டாலினோ, திமுக அமைச்சர்களை எண்ணி தூக்கம் தொலைக்கும நிலைக்கு ஆளாகி உள்ளார் என்று நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு வெச்சு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், திமுக நிர்வாகிகள் சிலரால் தமது தூக்கம் தொலைவதாக பொதுக்குழுவில் ஸ்டாலின் பேசி உள்ளது குறித்து அமைச்சர் பொன்மு இடம் சென்னையில் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ” முதல்வர் ஸ்டாலின் எப்போது மக்களை பற்றியும், எப்படி சிறப்பாக ஆட்சி நடத்தலாம் என்பது குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். எப்போதும் அவர் மக்கள், ஆட்சி பற்றிய சிந்தனையிலேயே திகழ்ந்து கொண்டிருப்பதால் பொதுக்குழுவில் அவ்வாறு பேசி இருந்தார்” என்று ஸ்டாலின் பேச்சுக்கு அமைச்ர் பொன்முடி புதுவிளக்கம் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.