பாம்பன் பாலத்தில் ஆம்னி பஸ் மோதி விபத்து: கடலுக்குள் கவிழாமல் தப்பியது; டிரைவர், கண்டக்டர் உள்பட பத்து பேர் படுகாயம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி அரசு பஸ் நேற்று காலை சுமார் 30க்கும் அதிகமான பயணிகளுடன் புறப்பட்டது. பாம்பன் அன்னை இந்திரா காந்தி சாலைப்பாலத்தில் காலை 7 மணியளவில் பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது பாலத்தின் மையப்பகுதியில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த ஆம்னி பஸ், எதிர்பாராதவிதமாக அரசு பஸ் மீது மோதியது. மோதிய வேகத்தில் நிலைதடுமாறிய ஆம்னி  பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் நடைமேடையில் ஏறி, தடுப்புச்சுவர்  மீது மோதி நின்றது.  இதில் ஆம்னி பஸ்சின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. கொஞ்சம் தவறியிருந்தால் கூட பஸ், தடுப்புச் சுவரை இடித்து விட்டு கடலுக்குள் விழுந்து மிகப் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக கடலுக்குள் பஸ் விழாததால் பயணிகள் உயிர் தப்பினர். இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் கிருஷ்ணமூர்த்தியின் கால் முறிந்தது. அரசு பஸ்சின் டிரைவர், கண்டக்டர், பயணிகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர்.ஆம்னி பஸ்சில் குறைந்தளவே பயணிகள் வந்ததாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.