இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம்: தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

மரவகை இனத்தைச் சார்ந்த தேவாங்குகள் சிறிய, இரவு நேர பாலூட்டிகள். சுற்றுச்சூழல் மற்றும் நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்காற்றும் இந்த தேவாங்கு இனங்கள், விவசாய பயிர்களுக்கு சேதம் உண்டாக்கும் பூச்சிகளை வேட்டையாடி விவசாயிகளுக்கு நன்மை பயக்கின்றன. ஆனால், மாறிவரும் வாழ்வியல் முறைகளால், தேவாங்கு இனம் தொடர்ச்சியாக அழிந்து வருகின்றன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம், (IUCN) தேவாங்கு இனத்தினை அழிந்து வரும் இனமாக பட்டியலிட்டுள்ளது.

எனவே, இவற்றை பாதுகாத்து இவைகளின் எண்ணிக்கையைப் பெருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 11,806.56 ஹெக்டேர் (ஏழு பிளாக்குகளில்) பரப்பளவில் இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக “கடவூர் தேவாங்கு சரணாலயம்” அமைத்து தமிழ்நாடு அரசு அறிவிக்கை செய்துள்ளது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயமாக இது அமையவுள்ளது.

இந்த நிலையில், தேவாங்குகளின் வாழ்விடத்தைப் பற்றிய விரிவான ஆய்வு மேற்கொண்டு மேலாண்மைத் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என வனவிலங்கு வல்லுநர்கள் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் மூத்த விஞ்ஞானி ஹொன்னவல்லி குமார கூறுகையில், “தேவாங்குகள் பெரும்பாலும் காப்புக்காடுகளில் காணப்பட்டாலும் விவசாய வயல்களிலும் காணப்படுகின்றன. இவற்றின் மேலாண்மைத் தேவைகளைப் புரிந்து கொள்ள விவசாயத் துறையில் விலங்கினங்களின் பரவல் முறை மற்றும் அவற்றின் உயிர்வாழ்வு விகிதம் பற்றிய விரிவான ஆய்வு அவசியம். மேலும், தேவாங்குகள் மீதான மக்களின் அணுகுமுறையைப் புரிந்துகொள்வதும் அவசியம். இதன் மூலம் மக்களின் நம்பிக்கையை பெற முடியும்.” என்கிறார்.

தேவாங்குகளை கண்காணிக்கவும், பாதுகாக்கப்பட்ட காடுகளில் வசிக்கும் மக்கள் மற்றும் இந்த காடுகளை சார்ந்துள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒரு நெறிமுறை வெளியிடப்பட வேண்டும் என வலியுறுத்தும் ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள், தேவாங்குகளின் வாழ்விட இழப்பானது அவைகளை ஏற்கனவே தனிமைப்படுத்தியுள்ளது. மரச்சாமான்கள் மற்றும் விறகுகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதால் இந்த இனம் குறைந்து வருகிறது என சுட்டிக்காட்டுகின்றனர்.

“கிழக்கு தொடர்ச்சி மலைகளின் புதர்க்காடுகளை பாதுகாப்பது மட்டுமே தேவாங்குகளை நீண்டகாலமாக பாதுகாக்க உதவும். எனவே, தேவாங்குகளின் பாதுகாப்புக்காக தற்போதுள்ள கிழக்கு தொடர்ச்சி மலைகளின் எஞ்சியிருக்கும் காடுகளை திறம்பட பாதுகாக்க வேண்டும் என நாங்கள் பரிந்துரைக்கிறோம்.” என ஹொன்னவல்லி குமார கூறுகிறார்.

மாநில சுற்றுச்சூழல் செயலர் சுப்ரியா சாஹு கூறுகையில், “முதல் கட்டமாக சரணாலய எல்லைகளை வரைபடமாக்கி வனத்துறை குறித்துள்ளது. தேவாங்குகளின் எண்ணிக்கையை கண்காணிக்க கேமிராக்கள் அமைக்கப்படும். அதை கண்காணிக்க ஜிபிஎஸ் மேப்பிங்கைப் பயன்படுத்துவோம்.” என்றார்.

கரூர் மற்றும் திண்டுக்கல் வனப்பகுதிகளில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையத்தின் சாம்பல் நிற மெல்லிய தேவாங்கள் பற்றிய 2022ஆம் ஆண்டு ஆய்வானது, தேவாங்குகளை பாதுகாக்க 1-20 ஹெக்டேர் பரப்பளவு தேவைப்படுவதால் பாதுகாக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்திற்கு குறைந்தபட்சம் 50 மீ முதல் அதிகபட்சம் 200 மீ வரை கருத்தில் கொள்ளலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளது.

சின்னயம்பட்டி காப்புக்காடு தேவாங்குகள் எண்ணிக்கையின் அதிக அடர்த்தியைக் கொண்டுள்ளது. இதனை பொதுமக்களுக்கான “தேவாங்கு பாதையாக” உருவாக்கலாம். இதன் விளைவாக சிறிய அளவிலான கல்வி சுற்றுலா உருவாகி, மரங்களை வெட்டுதல் அல்லது வேட்டையாடுதலில் ஈடுபடும் உள்ளூர்வாசிகளுக்கு மாற்று வாழ்வாதாரம் கிடைக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரை வெளிப்புறப் பாதுகாக்கப்பட்ட பகுதியிலேயே தேவாங்குகள் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால், தேவாங்குகள் வாழும் ஒவ்வொரு வனப்பகுதியும் அதன் வாழ்விடத்தை மீட்டெடுப்பதற்கு முக்கியமான ஒன்றாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.