இரண்டு மாநிலங்கள், மூன்று கட்சிகள்… குஜராத், ஹிமாச்சல் சட்டமன்ற தேர்தல் ஏன் அவ்வளவு முக்கியம்?

அடுத்த இரண்டு ஆண்டுகள் நடைபெறும் அனைத்து தேர்தல்களுமே முக்கியம் தான். ஏனெனில் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மத்தியில் ஆட்சியை பிடிக்க மாநில அளவிலான செல்வாக்கு என்பது மிகவும் அவசியமாகிறது. இதனை கருத்தில் கொண்டு தேசிய கட்சிகள் முதல் பிராந்திய கட்சிகள் வரை தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் குஜராத், ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தலும் முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக இந்த இரு மாநிலங்களில் பாஜக,
காங்கிரஸ்
இடையில் தான் பிரதானமான மோதல் என்பது இருக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் நிலை மிகவும் பலவீனமடைந்து காணப்படுகிறது. சரியான தலைமை இல்லாதது முதல் பல்வேறு மாநில சட்டமன்ற தேர்தல்களில் தோல்வியுற்றது வரை தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் இருந்து மீள்வதற்காக இந்திய ஒற்றுமை பயணத்தை (Bharat Jodo Yatra) ராகுல் காந்தி கையிலெடுத்துள்ளார். குமரி முதல் இமயம் வரை தொடர் நடைபயணம் மேற்கொண்டு காங்கிரஸிற்கான ஆதரவை பெற முயற்சித்து வருகிறார். இதற்கான பலனை இருமாநில சட்டமன்ற தேர்தல்களில் பார்ப்பதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஹிமாச்சல் பிரதேசத்தை பொறுத்தவரை 5 ஆண்டுகால பாஜக ஆட்சியின் மீது ஒருவித அதிருப்தி மனநிலை ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இதற்கு முந்தைய தேர்தல்களில் ஹிமாச்சல் பிரதேசத்தில் இருகட்சிகளும் மாறி மாறி ஆட்சியை பிடித்திருப்பதை பார்க்க முடிகிறது. எனவே பாஜகவிற்கு எதிராக திரும்பும் வாக்குகளை கைப்பற்றி ஆட்சிக் கட்டிலில் அமர காங்கிரஸ் தீவிரமாக செயல்பட வேண்டியிருக்கிறது.

அதேசமயம் தங்கள் ஆட்சிக்கு எதிராக எந்தவொரு அதிருப்தியும் இல்லை என்று காட்டும் வண்ணம் வெற்றி பெற்றுக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. இந்த வெற்றியை முன்னுதாரணமாக வைத்தே 2024 மக்களவை தேர்தலுக்கு வாக்கு வங்கியை அக்கட்சி பலப்படுத்த வேண்டியுள்ளது. எனவே அவ்வளவு எளிதில் ஹிமாச்சல் பிரதேசத்தை பாஜக விட்டுக் கொடுக்க வாய்ப்பில்லை. குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை 28 ஆண்டுகளாக பாஜக தொடர்ந்து ஆட்சிக் கட்டிலில் இருந்து வருகிறது. அக்கட்சியின் கோட்டையாக குஜராத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

இருந்தாலும் பத்தோடு பதினொன்றாக இந்த தேர்தலை பாஜக எடுத்துக் கொள்ளாது. ஏனெனில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகிய இருவருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தல் கவுரவப் பிரச்சினையான ஒரு விஷயம். இங்கு பெறும் வெற்றியை தான் ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்னுதாரணமாக பாஜக முன்னிறுத்தும். அதுமட்டுமின்றி 182 எம்.எல்.ஏக்கள் கொண்ட குஜராத் சட்டமன்றத்தில் 1990ல் இருந்து தொடர்ச்சியாக மூன்று இலக்க எண்ணிக்கையில் பாஜக வெற்றி பெற்று வந்தது. 2017 சட்டமன்ற தேர்தலில் 99 என இரண்டு இலக்கமாக குறைந்தது.

இது அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. இதை மாற்றி மூன்று இலக்க எண்ணிக்கையில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டிய கட்டாயத்தில் பாஜக இருக்கிறது. இதற்கிடையில் தேசிய அளவில் கவனம் பெற்று வரும் ஆம் ஆத்மி கட்சி இருமாநிலங்களிலும் போட்டியிட திட்டமிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய உற்சாகத்தில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் பிரச்சாரத்தை முன்னெடுக்க அரவிந்த் கெஜ்ரிவால் முடிவு செய்துள்ளார்.

எனவே பாஜக, காங்கிரஸ் என இரண்டே வாய்ப்புகள் இருந்த இடத்தில் மூன்றாவதாக ஆம் ஆத்மி கட்சி புகுந்து வாக்கு வங்கி அரசியலை மாற்றம் செய்யவிருக்கிறது. ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பில்லை என்றாலும் வாக்கு வங்கியை இரண்டு இலக்க எண்ணிக்கையில் உயர்த்தக்கூடும். ஒட்டுமொத்தமாக குஜராத், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகமிருந்தாலும், காங்கிரஸ் பலமாக போராட வேண்டியுள்ளது.

ஒருபக்கம் இந்திய ஒற்றுமை பயணம், மறுபுறம் கட்சி தலைமைக்கான தேர்தல் என காங்கிரஸை பலப்படுத்த போராடிக் கொண்டிருக்கும் சூழலில் மற்றுமொரு தோல்வியானது அக்கட்சிக்கு பின்னடைவாக அமைந்துவிடும். இது கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரை பாதிக்கும். ஒட்டுமொத்தமாக இரு மாநிலங்கள், மும்முனைப் போட்டி என்று சொல்லுமளவிற்கு அரசியல் களம் மாறியிருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.