நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதிகளான சின்னப்ப நாயக்கன்பாளையம், குப்பாண்டாபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர் குமாரபாளையம் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, உழவர் சந்தை ஆகிய பகுதிகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் மற்றும் மாணவிகள் அவதியடைந்தனர். இதனால் பள்ளிக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி விடுமுறை விடப்பட்டது.
இதையடுத்து பள்ளியின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் பள்ளி மழைநீர் பாதிப்பு குறித்து நேரில் பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளி வளாகத்தில் உள்ள மழைநீர் பாதிப்பிற்கான காரணம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிம் கேட்டறிந்தார். மேலும் நிரந்தர தீர்வு காணும் வகையில் ஓடையை ஆழப்படுத்தி பள்ளியின் தடுப்பு சுவரை உயரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தற்காலிகமாக மழைநீர் வெளியேற்ற வருவாய் துறையினருக்கு அறிவுறுத்தினார்.
அப்போது மது பிரியர் ஒருவர் மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி பிரச்சனை குறித்து பேச வந்த போது, மாவட்ட ஆட்சியர் தன்னை தவிர்த்து சென்றதாக கூறி பள்ளி நுழைவாயில் முன்பு தர்ணா போராட்டத்தை ஈடுபட்டார். தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்காத மது பிரியர் ரகுபதி பள்ளிக்கு நிரந்தர பிரச்சனைக்கான தீர்வு காணும் வரை எழுந்து செல்லப் போவதில்லை என கூறினர்.
தொடர்ந்து அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது சத்தியம் செய்து கொடுங்கள் எழுந்து செல்கிறேன் என்றார். இதன் பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தையடுத்து. போலீசாரை கண்ட மது பிரியர் நைசாக எழுந்து சென்றார். மது பிரியரின் தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
