அக்னி வீரர்களுக்கு சம்பளம்: வங்கிகளுடன் ராணுவம் ஒப்பந்தம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியது.

இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேசமயம், இந்தத் திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் இளைஞர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அக்னிவீரர்களுக்கு சம்பளத் தொகுப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பதினொரு வங்கிகளுடன் இந்திய ராணுவம் கையெழுத்திட்டுள்ளது. அக்கினி வீரர்களுக்கு வங்கி வசதிகளை அளிக்கும் விதத்தில், பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎஃப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் இந்திய ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீஹரி, வங்கிகளின் மூத்த அதிகாரிகள் இடையே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அக்னி வீரர் சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் அம்சங்கள் மற்றும் பலன்கள் பாதுகாப்புச் சம்பளத் தொகுப்பைப் போலவே உள்ளன. கூடுதலாக, வங்கிகள் வெளியேறும் அக்னி வீரர்களுக்கு அவர்களின் தொழில் முனைவோர் திறன்களை மேம்படுத்த மென் கடன்களை வழங்குகின்றன. “அக்னிபத் திட்டத்தின்” கீழ் முதல் தொகுதி அக்னிவீரர்கள் ஜனவரி 2023க்குள் பயிற்சி மையங்களில் சேருவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.