பரந்தூர் விமான நிலையம்: தமிழக அரசின் முடிவை தெளிவுபடுத்திய அமைச்சர்!

பரந்தூரில் விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் நிலைப்பாட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியுள்ளார்.

சட்டப்பேரவையில் பரந்தூர் விமான நிலையம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.

“சென்னை விமான நிலையம் நாட்டிலேயே 3ஆம் இடத்தில் இருந்தது; தற்போது பயணிகளை கையாளுவதில் 5ஆம் இடத்தில் உள்ளது. சரக்குகளை கையாளும் திறனில் சென்னை விமான நிலையம் 7 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளது. அண்டை மாநிலங்களில் புதிய விமான நிலையம் இருப்பதால் தான் வளர்ச்சி பெற்று வருகின்றன.

பரந்தூர் விமான நிலையம் அவசியமானது. விமான நிலையம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நில அமைப்பு, தொழில்நுட்ப காரணங்களை கொண்டே பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

வளர்ச்சி மற்றும் மக்கள்தொகை பெருக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பார்த்தால் புதிய விமான நிலையம் அவசியம். தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதில் சிக்கல் இருப்பதால் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டியுள்ளது.

சென்னை அருகே புதிய விமான நிலையத்தை எங்கே அமைத்தாலும் ஏரிகள், விவசாய நிலங்களில்தான் அமைக்க வேண்டியிருக்கும்.

30 ஆண்டுக்கான தேவையை இப்போது நாம் கட்டமைக்க வேண்டியது அவசியம். 10 கோடி பயணிகளை கையாளும் வகையில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுகிறது. ” என்று அமைச்சர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.