சட்டப்பேரவையில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் சசிகலா,மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது. மேலும் அந்த அறிக்கையில் அமெரிக்காவில் இருந்து வந்த மருத்துவர் சமீன் சர்மா, ஜெயலலிதாவுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைத்திருந்தாலும், அது நடக்கவில்லை. அவருக்கு திறந்த இதய அறுவை சிகிச்சை சாதாரண அறையில் வைத்து செய்யப்பட்டது. அப்போது ரத்த வெள்ளத்தி இருந்த ஜெயலலிதாவை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக அப்போதைய தலைமை செயலாளர் சாட்சியம் கூறினார்.
ஜெயலலிதா 2016 டிசம்பர் 4ஆம் தேதி மதியம் 3 மணி முதல் 3.30 மணிக்குள் இறந்தார். ஆனால் டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்தார் என அப்போலோ மருத்துவமனை அறிவித்திருக்கிறது போன்ற பல விஷயங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த அறிக்கை தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், ஜெயலலிதாவின் மரணத்தில் உண்மையில் ஏதேனும் விரும்பத்தகாத நிகழ்வு நடந்திருக்கிறதோ என்ற சந்தேகத்தை இந்த அறிக்கை உறுதி செய்திருப்பதாக பலர் கூறுகின்றனர்.
இந்நிலையில், உயிரிழப்பதற்கு சில நாள்களுக்கு முன்பு ஜெயலலிதா மருத்துவர் சிவக்குமாரிடமும், சசிகலாவிடமும் பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில் ஜெயலலிதா கடுமையாக இருமியபடி, “நான் பேசுவது கேட்கிறதா. என்னால் எதுவும் முடியவில்லை. மூச்சு விடும்போது உய் உய் என்று கேட்கிறது. நான் கூப்பிட்டபோது எடுக்க முடியலனு சொன்னீங்க. எல்லாம் ஒன்னு கிடக்க ஒன்னு சொல்றீங்க. நீங்களும் சரியில்லை. எடுக்கமுடியலனா விடுங்க” என்று கூறுவதுபோல் இடம்பெற்றுள்ளது.
அதற்கு சிவக்குமார், இப்போது எதுவும் கேட்கவில்லை அப்ளிகேஷன் டவுன்லோட் செய்திருக்கிறேன் என மருத்துவ ரீதியாக கூறுகிறார். அதேபோல் மற்றொரு குரல் ஜெயலலிதாவிடம் கவலைப்படாதீங்க படுத்த பிறகு மாஸ்க் போட்டுக்கொள்ளலாம் என்று கூறுகிறது. அந்தக் குரல் சசிகலாவின் குரல் என்று கருதப்படுகிறது.
தற்போது இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதேசமயம் இந்த ஆடியோ குறித்த உண்மைத்தன்மை எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.