தீபாவளி பண்டிகையையொட்டி களைகட்டும் குந்தாரப்பள்ளி வாரச்சந்தை!: ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை..விவசாயிகள் மகிழ்ச்சி..!!

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் புகழ்பெற்ற குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை களைகட்டியுள்ளது.நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக மக்கள் தயாராகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி அருகே உள்ள குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஆடு விற்பனையானது களைகட்டியிருக்கிறது. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக குந்தாரப்பள்ளி வாரச்சந்தைக்கு அழைத்து வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக புரட்டாசி மாதம் என்பதால் இறைச்சி விற்பனை பெருமளவில் மந்தமடைந்தது.

தற்போது புரட்டாசி மாதம் கழிந்து தீபாவளி பண்டிகை உடனடியாக வருவதால்  ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. கோவை, சென்னை, மதுரை, சேலம், ஈரோடு போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, பெங்களூரு, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் ஆடுகள் வாங்க காலை முதலே குவிந்துள்ளனர். 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.10,000 முதல் அதிகபட்சமாக ரூ.12,000 வரை விற்பனையாகிறது. ஆடுகள் விலை அதிகரிக்கப்பட்டாலும் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இன்று ஒருநாளில் சுமார் 6 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையாகவுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.