ரிஷி சுனக் இந்தியரே இல்லை – அடித்து சொல்லும் பாஜக மூத்த தலைவர்

இங்கிலாந்தின் வரலாற்றில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்றுள்ளார். சுமார் 200 ஆண்டுகளாக, இந்தியாவை தனது காலனியாதிக்கத்தின் மூலம் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இங்கிலாந்து போன்ற நாட்டில், இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவர் பிரதமராக வந்திருப்பது பெரிதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்நிலையில், ரிஷி சுனக் முழுமையான ஒரு ஆங்கிலேயர் தான் என பாஜக மூத்த தலைவர் உமா பாரதி கருத்து தெரிவித்துள்ளார். மூன்று தலைமுறைகளுக்கு முன்னரே அவரது குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து சென்றுவிட்டதாகவும், இந்துவாக இருந்தாலும் அவர் இங்கிலாந்திற்கு சாதகமாகதான் செயலாற்றுவார் என்றும் கூறியுள்ளார். 

மேலும், அவர் நேற்று வெளியிட்டுள்ள ட்வீட்டில்,”இங்கிலாந்தில் பிரதமராக பதவியேற்றுள்ள ரிஷி சுனக்கின் முன்னே பெரும் சவால்கள் காத்திருக்கின்றன. ஏனென்றால், மிகவும் அந்த நாடு சிக்கலான நிலைமையில் இருக்கும் தருணத்தில் அவர் பதவியேற்றுள்ளார்” என பதிவிட்டிருந்தார். 

தொடர்ந்த அவர்,”ரிஷி சுனக் இந்தியராகவும், இந்துவாகவும் இருந்தாலும், அவர் நம் அனைவரையும் போல ஒரு ஆரியர் ஆவார். அவருடைய மூதாதையர்கள் மூன்று தலைமுறைக்கு முன்னர் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தனர். ரிஷி சுனக் இங்கிலாந்தில்தான் பிறந்துள்ளார். அவர் ஒரு முழுமையான ஆங்கிலேயர். அவர் சிறப்பாக பணியாற்ற நாம் கடவுளை வேண்டுக்கொள்வோம்” என தெரிவித்துள்ளார். 

மேலும், ரிஷி சுனக் இந்துவாக இருப்பதாக சிறிய உள்ளம் படைத்தவராக அவர் இருக்க மாட்டார் என நம்புவதாக உமா பாரதி தெரிவித்துள்ளார். உலகின் அனைவரும் ஒரு குடும்பம் என்ற ‘வசுதெய்வ குடும்பகம்’ முறையில் ரிஷி சுனக் செயல்பட்டு அனைத்து சக்திகளுடன் இணைந்து அழர் செயல்படுவார் என தெரிவித்துள்ளார். 

மேலும் அவர்,”அவரது மதம் குறித்தும், இனம் குறித்தும் நடந்துவரும் விவாதங்களை பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது. காங்கிரஸ்காரர்களிடம் நான் என்ன சொல்வது?. ஆகவே, பாஜகவினர் ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இந்த விவாதத்தில் நீங்கள் பங்கேற்காதீர்கள்.

ஒரு காலத்தில், தங்கள் ‘சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் மறையாது’ என கூறிய ஒரு நாட்டில் வறுமையின் இருள் எப்படி சூழ்ந்தது என்பதுதான் விவாதப் பொருளாக இருக்க வேண்டும். நாம் எப்போதாவது அப்படி ஆகிவிடுவோமா?. அது நமக்கு நடக்காது என்று அடித்துச் சொல்லலாம். இங்கிலாந்தில் மிகக் குறைவான இயற்கை வளங்கள்தான் உள்ளன. அதன் செல்வம் என்பது உலகத்தின் பிற பகுதிகளில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டது. இந்தியாவில் இயற்கை மற்றும் அறிவுசார் வளங்கள் அவற்றை விட அதிகம்” என்றார்.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.