சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல காப்பகம் மற்றும் மருத்துவமனை 200 ஆண்டுகள் பழமையானது. கீழ்ப்பாக்கம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வரும் அளவுக்கு இங்குள்ள மனநல காப்பகம் மிகவும் புகழ்பெற்றது. இங்கு, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கும் மேல் சிகிச்சையில் இருக்கின்றனர். அப்படி, சென்னையை சேர்ந்த முதுநிலை பட்டதாரியான மகேந்திரன், 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப தகராறில் திடீரென மனநலம் பாதிக்கப்பட்டார். இதனால், உறவினர்கள் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அதேபோல், வேலூரை சேர்ந்த ஆசிரியரான தீபா என்பவர், தந்தை இறந்த சோகத்தால் மனஅழுத்தம் ஏற்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டது. அவரும், 2 ஆண்டுகளாக மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்களுக்கு மனநல காப்பக மருத்துவமனை இயக்குனர் பூர்ண சந்திரிகா கவுன்சலிங் மற்றும் மருந்து என சிறப்பான வகையில் சிகிச்சை அளித்தார்.
விரைவில் குணமடைந்த இவர்கள் மனநல காப்பகத்தில் இருந்து வெளியேற மறுத்து அங்கேயே சர்வீஸ் செய்து வருகின்றனர். இந்தச் சூழலில் மகேந்திரனுக்கும், தீபாவுக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து இருவருக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தலைமையில் திருமணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் மேடையில் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ”தினந்தோறும் 6 முதல் 7 திருமணங்களுக்கு செல்வேன், இதுவரை மிகவும் மகிழ்வுடன் கலந்துகொண்ட திருமணம்ஜிப்ஸி இன நரிக்குறவ மக்களின் திருமண நிகழ்வாகும். அதற்கடுத்து இந்த கல்யாணம்தான் எனக்கு மன நிறைவை தருகிறது.இந்த திருமணத்தில் நான் கலந்துகொண்டது என் வாழ்நாளின் அரும்பெரு பேறுகளில் ஒன்று.
திருமண விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றி திருமணம் இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. மேலும், அழையா விருந்தாளியாக இந்த திருமணத்திற்கு நான் வந்திருக்கிறேன்” என்றார்.
மேடையில் பேசிய மணமகன் மகேந்திரன் மற்றும் மணமகள் தீபா, எங்கள் வீட்டில் திருமணம் செய்து வைத்திருந்தால்கூட இப்படி நடத்தி வைத்திருக்கமாட்டார்கள். எங்கள் திருமணம் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வேலை வாய்ப்பு கொடுத்தமைக்கு நன்றி என்றனர்.
முன்னதாக, திருமணம் நடைபெற்ற மகேந்திரன் மற்றும் தீபா இரண்டு பேரும் பட்டதாரிகள். அதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் வெற்றி அழகன் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையிலேயே அவர்கள் இரண்டு பேருக்கும் வார்டு மேற்பார்வையாளராக பணி வழங்கி அந்த பணி நியமன ஆணையை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் இருவரிடமும் வழங்கினார்.