ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பு: டிடிவி தினகரன் சொல்வது என்ன?

தஞ்சாவூரில் கட்சியினர் இல்ல விசேஷங்களிலும், கட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்ட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசினார்.


பாஜக இந்தியை திணிக்காது!

தமிழகத்தில் தமிழ் தான் தாய்மொழி. தாய்மொழிக் கல்வி அவசியம் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. தமிழக மக்கள் எந்த மொழியையும் விரும்பி ஏற்றுக்கொள்வார்களே தவிரத் திணிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எப்படி இந்தியைத் திணிப்பார்கள்? 65க்குப் பின் காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சிக்கு வராமல் போனதற்கு காரணம் இந்தி திணிப்புதான். எனவே மத்திய அரசு இது போன்ற விபரீத முயற்சியில் ஈடுபடாது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை!

தமிழ்நாட்டில் தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் பயங்கரவாதம் தலைதூக்க தொடங்குகிறது. அதனால் வாக்கு வங்கி அரசியலை மனதில் கொள்ளாமல் தமிழ்நாட்டின் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் பொறுப்பேற்று அரசாங்கம் சிறப்பாக செயல்பட வேண்டும். கோவை சிலிண்டர் குண்டு வெடிப்பு சம்பவம் அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்துகிற விஷயம். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. போதை கலாச்சாரம் பெருகி கொண்டு இருக்கிறது. இதே நிலை நீடித்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்பது தான் உண்மை.

அண்ணாமலையின் சர்ச்சைப் பேச்சு

செய்தியாளர்கள் எங்களை மடக்க வேண்டும் என்று தான் கேள்விகளைக் கேட்பீர்கள். கிரிக்கெட்டில் எதிர் டீம் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்றா பந்து வீசுவார்கள். அண்ணாமலை இப்பொழுது தானே அரசியலுக்கு வந்துள்ளார். போகப் போக நிதானமாகி விடுவார். அண்ணாமலை தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர். கட்சியின் தலைமையும் அவரைக் கவனித்துக் கொண்டு தான் இருக்கும். அதிகமான விஷயங்களைச் சரியாக எடுத்துச் சொல்கிறார். மக்களின் மனதில் இருக்கும் கேள்விகளைத் தான் ஊடகத்தில் இருப்பவர்கள் கேட்கிறார்கள். அதற்குப் பொறுமையாகப் பதில்களைச் சொல்ல வேண்டும்.

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பு?

அதிமுகவில் இதற்கு முன் யார் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரையும் சேர்த்து வைத்தார்களோ, அவர்கள் மனது வைத்தால் தான், அவர்கள் இருவரும் சேருவார்கள்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.