கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது தாளாளர் வீட்டில் 300 பவுன், ரூ.50 லட்சம் கொள்ளை? – சிபிசிஐடி விசாரணையில் புதிய தகவல்

விழுப்புரம்: சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது, பள்ளி தாளாளர் வீட்டில் இருந்த 300 பவுன் நகைகள், ரூ.50 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் தொடர்புடைய சிறுவன் ஒருவனை பிடித்து, விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி ஒருவர், கடந்த ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து ஜூலை 17-ம் தேதி அந்த மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு சில அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட, அது கலவரமாக வெடித்தது. இந்த கலவர வழக்கில் 306 பேர் மீது சின்னசேலம் போலீஸாரும், 107 பேர் மீது சிறப்பு புலனாய்வு குழு போலீஸாரும் வழக்கு பதிவு செய்து, 413 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் 13 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கின் தற்போதைய விசாரணை நிலை குறித்து சிபிசிஐடி போலீஸாரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:

முகமூடி கும்பல்: கலவரத்தின்போது, பள்ளி வளாகத்தில் இருக்கும் தாளாளர் ரவிக்குமார் வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த கலவரக் கும்பல் ஒன்று, சுமார் 300 சவரன் நகை மற்றும் ரூ.50 லட்சம் பணத்தை கொள்ளையடித்துள்ளது தெரியவந்தது.

இதில் தொடர்புடைய சிறுவன் ஒருவனைப் பிடித்து விசாரித்தபோது, தற்செயலாக அக்கும்பலோடு இணைந்ததாகவும், தனக்கு கலவரக் கும்பல் ரூ.50 ஆயிரம் கொடுத்ததாகவும், அதில் செல்போன், உடைகள் வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.