காலையில் திருமணம்… மாலையில் மரணம்… காதல் திருமணம் செய்த தாம்பரம் இன்ஜினியர் மர்ம சாவு

புதுச்சேரி: காதல் திருமணம் செய்த சென்னை தாம்பரத்தை சேர்ந்த இன்ஜினியர் மாலையில் மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோமதி (30). கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரும் சென்னை தாம்பரம் காந்தி நகரை சேர்ந்த காளிதாஸ் மகன் சுரேஷ்குமார் (30) என்பவரும் பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் இன்ஜினியரிங் படித்துள்ளனர். அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

இன்ஜினியரான சுரேஷ்குமார் சென்னையில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு, புதுவை காலாப்பட்டு பாலமுருகன் கோயிலில் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக சுரேஷ்குமார் தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கோட்டக்குப்பம் வந்து தனியார் கெஸ்ட் ஹவுசில் அறை எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று காலை காலாப்பட்டு பாலமுருகன் கோயிலில் கோமதிக்கும் சுரேஷ்குமாருக்கும் திருமணம் நடந்தது.

இதையடுத்து நேற்று மாலை கோட்டக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர். இரவு வரவேற்பு முடிந்த பின்னர், சிறிது நேரம் ஓய்வு எடுப்பதற்காக சுரேஷ்குமார் கெஸ்ட் ஹவுசுக்கு சென்றார். அங்கு திடீரென அவர் மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு உடனடியாக சுரேஷ்குமாரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து சுரேஷ்குமார் தந்தை காளிதாஸ் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் மர்ம மரணம் என வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் திருமணம் முடிந்த நிலையில் மாலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.