டுவிட்டரில் ஊழியர்களின் ராஜினாமா அதிகரித்தாலும் நான் கவலைப்படவில்லை – எலான் மஸ்க் டுவீட்!

சான்பிரான்சிஸ்கோ,

சமூக வலைதளமான டுவிட்டரை கையகப்படுத்திய பிறகு, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறார்.

டுவிட்டர் அதிக லாபத்தை உருவாக்கத் தொடங்கவில்லை என்றால் திவால் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று கூறிய மஸ்க், வீட்டில் இருந்து வேலை செய்யும் கொள்கையில் பல மாற்றங்களைச் செய்துள்ளார். அதன்படி ஊழியர்கள் ஒரு வாரத்துக்கு 80 மணி நேரம் பணிபுரிய தயாராக வேண்டும் என்றும் கூறினார்.

இந்த நிலையில், டுவிட்டர் ஊழியர்கள் அனைவருக்கும் தொடர்ந்து பணி அழுத்தம் அதிகரித்து வருகிறது.கடந்த புதன்கிழமை இரவு, டுவிட்டரில் மீதமுள்ள ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சலில், டுவிட்டர் வெற்றிபெற நாம் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். கடின உழைப்புக்கு தயாராக இருங்கள் அல்லது மூன்று மாத சம்பளத்துடன் ராஜினாமா செய்யலாம் என்று அனைத்து ஊழியர்களிடமும் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் விரைந்து முடிவெடுக்க, நேற்று ஒருநாள் கால அவகாசம் வழங்கினார்.எலான் மஸ்க்கின் இறுதி எச்சரிக்கையை அடுத்து, நூற்றுக்கணக்கான டுவிட்டர் ஊழியர்கள் மொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர்.

இந்த நிலையில், டுவிட்டரில் ஊழியர்களின் ராஜினாமா அதிகரித்துக் கொண்டிருந்தாலும் நான் கவலைப்படவில்லை என்று அதன் உரிமையாளர் எலான் மஸ்க் கூறினார்.

டுவிட்டரில் ஊழியர்களின் ராஜினாமாவை குறிப்பிட்டு, ‘ இதைப் பற்றி மக்கள் என்ன நினைப்பார்கள்?’ என்று ஒருவர் டுவிட்டரில் கேள்வி கேட்டார்.

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க், ‘சிறந்த நபர்கள் டுவிட்டரில் தங்கியிருக்கிறார்கள், அதனால் நான் கவலைப்படவில்லை’ என்றார். மேலும், டுவிட்டர் பயன்பாடு இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.