காசி தமிழ் சங்கமம்: வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி பங்கேற்பு!

தமிழகத்துக்கும், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கும் (காசி) இடையே நீண்டகால தொடர்பு உள்ளது. இந்த தொடர்பை வலுப்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக வாரணாசியில் ஒரு மாத காலம் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. காசி தமிழ் சங்கமம் என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகள் நவம்பர் 11ஆம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை ஒருமாத காலம் நடைபெறவுள்ளது.

சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் இந்த சங்கமத்தில் பங்கேற்க தமிழகத்தைச் சேர்ந்த 2,592 பிரதிநிதிகள் வாரணாசி சென்றுள்ளனர். பிரதிநிதிகள் பங்கேற்க வசதியாக, தமிழகத்தில் இருந்து காசிக்கு 13 ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன.

மத்திய கல்வி அமைச்சகம் செய்துள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்வில், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள், கலாசார நிகழ்வுகள், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாரணாசிக்கும், தமிழகத்துக்கும் இடையேயான ஆழமான கல்வி, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உறவுகளை மேம்படுத்துவதே காசி தமிழ் சங்கமத்தின் நோக்கம் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் காசி தமிழ் சங்கமம் விழாவை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வாராணசியில் உள்ள பனாரஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், இசையமைப்பாளர் இளையராஜா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.