கோபி: கோபி அருகே கடன் தொல்லையால் உரக்கடைக்காரர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (54). இவர், கவுந்தப்பாடியில் உரக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சித்ரா (45). இவர்களது மகன் கார்த்திக் ராஜா (21). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமூர்த்தி, சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு வங்கியில் கடன் பெற்று வீடு கட்டினார்.
உரக்கடையில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திரும்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து வங்கியில் இருந்து வீட்டுப்பத்திரத்தை பெற்று தனியார் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்து கட்டினார்.
வேறு சில இடங்களிலும் கடன் வாங்கியதாக தெரிகிறது. கடனை திருப்பி செலுத்துமாறு தனியார் நிதி நிறுவனம், கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்ததால் தம்பதியர் கடந்த சில நாட்களாக நிம்மதியின்றி தவித்தனர். இந்நிலையில், நேற்று காலை வெகுநேரமாகியும் வீட்டு கதவு திறக்கப்படவில்லை. தகவலறிந்து அவர்களது மகன் வந்து கதவை திறந்து பார்த்தபோது தந்தையும், தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.