சி.எம் பதவி கொடுத்த மோடி… பிரசாந்த் கிஷோர் உடைக்கும் அரசியல் சீக்ரெட்!

மத்தியில் ஆளும் பாஜகவும் சரி, பிராந்திய கட்சிகளும் சரி. அனைவரது இலக்கும் 2024 மக்களவை தேர்தலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவை வீழ்த்த முடியுமா? காங்கிரஸின் திட்டம் என்ன? மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தலைவர்களின் அரசியல் கணக்கு வெற்றி பெறுமா? என்றெல்லாம் கேள்விகள் எழுந்து வருகின்றன.

ஜன் சூரஜ் யாத்ரா

இந்த சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பாஜக தனது அரசியல் கணக்கை தொடங்கியிருப்பது பற்றி பிரசாந்த் கிஷோர் முக்கியத் தகவல் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் மாற்று அரசியலை வழங்கும் முயற்சியாக தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் ஜன் சூரஜ் யாத்ராவை தொடங்கியிருக்கிறார். அதாவது, மாநிலம் முழுவதும் 3,500 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

சாமானியர்கள், இளைஞர்கள், தொழில் முனைவோர், பெண்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்களின் குறைகளை, எதிர்பார்ப்புகளை கேட்டறிகிறார். இதற்கிடையில் பிகார் மாநில ஆளுங்கட்சியாக இருக்கும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளக் கட்சியை அவ்வப்போது தாக்கி பேசி வருகிறார். இதனால் கோபமடைந்த அக்கட்சி தலைமை தக்க பதிலடி கொடுத்து கொண்டிருக்கிறது.

3வது இடம் பிடித்த JDU

இந்நிலையில் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் தனது ஜன் சூரஜ் யாத்ரா பயணத்தின் போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய பிரசாந்த் கிஷோர், 2020 பிகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக முன்னேற்றம் கண்டது. அதேசமயம் ஐக்கிய ஜனதா தளம் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. இருப்பினும் நிதிஷ் குமாரை அழைத்து முதல்வர் பதவி அளிக்கப்பட்டது. இதை உள்நோக்கத்துடன் தான் பிரதமர் மோடி செய்திருக்கிறார்.

பிரதமர் மோடி அரசியல் கணக்கு

அவரைப் பொறுத்தவரை 2024 மக்களவை தேர்தலில் பிகாரில் பாஜக வெற்றி வாகை சூட வேண்டும். எனவே நிதிஷ் குமாருக்கு பதவி கொடுக்காவிட்டால் தங்கள் வெற்றி வாய்ப்பில் சிக்கல் ஏற்படலாம் என்று கணக்கு போட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் தான் முதல்வர் பதவி கொடுத்து அழகு பார்த்தார். தற்போது கூட்டணி முறிந்து விட்டது.

இருப்பினும் பாஜகவின் வளர்ச்சிக்கு வலுவான அச்சாரம் போட்டுக் கொண்டனர். அடுத்து வரும் தேர்தலில் நிதிஷ் குமார் போன்ற மாற்று கட்சிகளை நாட வேண்டிய தேவையில்லை. தனது கட்சியில் இருந்தே புதிதாக ஒரு தலைவரை உருவாக்கிக் கொள்வர். இதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியிருக்கிறார்.

இந்த பேச்சு பிகார் மாநில பாஜகவை கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் பிரசாந்த் கிஷோருக்கு தக்க பதிலடி கொடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கின்றன. இதையொட்டி பிரசாந்த் கிஷோரின் திட்டம் என்னவென்பது பிகாரில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.