திகார் சிறையில் தரமான சாப்பாடு… 8 கிலோ ஏறிட்டாரு…: அமைச்சரின் அடுத்த வீடியோ வெளியானது

புதுடெல்லி: திகார் சிறையில் இருக்கும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு தரமான உணவு கிடைப்பதால் 8 கிலோ எடை கூடிவிட்டதாக சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பணமோசடி வழக்கில் கைதாகி டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம்ஆத்மி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சிறை விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை வாழ்வதை உறுதிபடுத்தும் வகையில் கடந்த சில நாட்களாக புதுபுது வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன.

முதலில் அமைச்சருக்கு மசாஜ் செய்வது போன்ற வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்விவகாரம் குறித்து டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், சிறையில் இருக்கும் சத்யேந்தர் ஜெயின், தற்போது 28 கிலோ எடை குறைந்துவிட்டதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஆனால், அவர் சிறையில் இருக்கும் காலத்தில் 8 கிலோ எடை கூடியுள்ளதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதனை உறுதிப்படுத்தும் வகையில், திகார் சிறை நிர்வாகம் தரப்பில் நேற்று வெளியான வீடியோவில், சத்யேந்தருக்கு தரமான உணவுகளும், பழங்களும் வழங்கப்படுகின்றன. அதனை அவர் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கு தேவையான உணவு பொருட்களை மற்றொரு சிறை கைதி கொண்டு வருகிறார். இந்த வீடியோ, ஆம்ஆத்மி கட்சிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அறிக்கை அளிக்்க உத்தரவு: அமைச்சர் சத்யேந்தர், சிறையில் சிறப்பு சிகிச்சை பெறும் தனது நடவடிக்கைகள் குறித்த வீடியோக்கள் ஊடகங்களில் ஒளிபரப்பாவதை தடுக்க கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதனை விசாரித்த சிறப்பு நீதிபதி விகாஸ் துல், இது தொடர்பாக திகார் சிறை நிர்வாகம் நாளை (இன்று) பதிலளிக்கவும் சத்யேந்தருக்கு சிறை விதிகளுக்குட்பட்டு உணவு வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்வதாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.