கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு | விசாரணைக்கு பள்ளிக் கட்டிடம் தேவையா? – சிபிசிஐடி விளக்கம் அளிக்க உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில், பள்ளி கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா என்பது குறித்து சிபிசிஐடி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இசிஆர் சர்வதேச பள்ளியில் பிளஸ் 2 மாணவி ஒருவர் மரணம் அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி அந்த பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளியின் உடைமைகளை சூறையாடி, தீயிட்டு எரித்தனர். இந்தக் கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில், பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த குழுவும் ஆய்வு செய்துவிட்டதால், பள்ளியை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று அந்த பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சுரேஷ்குமார் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீதிமன்ற உத்தரவின்படி செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அப்போது தமிழக தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, “மாணவி மரணம் குறித்த புலன் விசாரணை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. எனவே சம்பந்தப்பட்ட பள்ளியின் ‘ஏ’ பிளாக் கட்டிடம் விசாரணைக்கு தேவைப்படலாம்” என்று தெரிவித்தார்.

அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முழு வளாகமும் சீரமைக்கப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்.

அப்போது, மாணவியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு, “மகளிர் ஆணையம் விசாரித்து அளித்த அறிக்கையில், புலன் விசாரணையில் குறைபாடுகள் உள்ளன. எனவே முழுமையாக விசாரணை முடியும் வரை பள்ளியை திறக்க அனுமதிக்க கூடாது” என தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கில் சிபிசிஐடி-யை தாமாக முன் வந்து எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதி, குறிப்பிட்ட அந்த கட்டிடம் புலன் விசாரணைக்கு தேவைப்படுகிறதா? என்பது குறித்தும், எப்போது புலன் விசாரணையை முடித்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.