சென்னை உயர்நீதிமன்ற கிளையில், திருநெல்வேலியை சேர்ந்த ஐயா என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அதில், “இளம் தலைமுறையினரை ஈர்க்கும் வகையில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இந்த சூதாட்டத்திற்கு அடிமையாகும் இளைஞர்கள் மன அழுத்தம், கடன், வறுமை, விவாகரத்து, தற்கொலை வரை செல்கின்றனர்.
இதனை தடுக்க 18 வயதுக்கு கீழானவர்கள் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். குறிப்பாக இதனை விளையாட ஆதார் அல்லது பான் கார்டு சான்றிதழை பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும்” என்று அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். அதில், “18 வயதிற்கு கீழானவர்களுக்கு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் எப்படி தெரியவந்தது?
இந்த விவாகரத்தில் அரசுக்கு இருக்கும் பொறுப்பை விட பெற்றோருக்கு அதிக பொறுப்பு உள்ளது. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுத்து விட்டு, குழந்தைகள் மீது போதிய அக்கறை காட்டுவதில்லை.
குழந்தைகள் செல்போனில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பெற்றோர்கள் கண்காணிப்பதும் இல்லை. இதன் காரணமாகேவே இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகின்றன. சிறுவர்கள் ஆன்லைனில் சூதாட பெற்றோரே காரணம்” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
தொடர்ந்து மனுதாரரின் கோரிக்கை குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலர் மற்றும் மத்திய நிதித்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.