புதுச்சேரியில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்படும்: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: “அரசு மருத்துவக் கல்லுாரியில் பட்டப்படிப்பு, மேற்படிப்பு படித்த மாணவர்கள் ஓராண்டு புதுவையில் பணியாற்ற வேண்டும் என்ற நிலையை உருவாக்க உள்ளோம். எய்ட்ஸ் நோயாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 உயர்த்தப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

உலக எய்ட்ஸ் தின விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: ”புதுவையில் 1,500 எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கின்றனர். இதில் 40 சதவீதம் பேர் தமிழகம் மற்றும் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். எய்ட்ஸ் நோயாளிகளை நாம் ஒதுக்கக்கூடாது. ஏனெனில், அவர்கள் மன உளைச்சலால் பிற நோய்களால் பாதிக்கப்படுவர். முதியோர், விதவை, மாற்றத் திறனாளிகளுக்கு அனைத்து உதவித்தொகையும் ரூ.500 உயர்த்தியுள்ளோம். எய்ட்ஸ் நோயாளிகள் உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை வைத்தனர். அவர்களின் உதவித்தொகையும் ரூ.500 உயர்த்தி வழங்கப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக முதுநிலை மருத்துவ படிப்பில் பல பாடப்பிரிவுகளை கொண்டுவரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லுாரியில் குறைந்த செலவில் படிக்கின்றனர். அவர்கள் படித்துவிட்டு, புதுவை அரசு மருத்துவமனையில் சேவை செய்ய வேண்டும். இதற்காக அரசு மருத்துவக் கல்லுாரியில் பட்டம், பட்ட மேற்படிப்பு படித்த மாணவர்கள் ஓராண்டு புதுவையில் பணியாற்ற வேண்டும் என்ற நிலையை உருவாக்க உள்ளோம்.

இன்னும் ஒரு சில மாதங்களில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் இளைஞர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதனால் அரசு பணி கிடைக்கவில்லையே என்ற இளைஞர்களின் ஏக்கம் நிறைவேற்றப்படும்” என்று குறிப்பிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.