கோயில்களில் செல்போனுக்கு தடை; ஆடைகளுக்கும் அதிரடி கட்டுப்பாடு!

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்படுத்த உடனடியாக தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அர்ச்சகர் சீதாராமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் கடந்த மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.

அந்த மனுவில், ‘திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு இடையூறாக சில அர்ச்சகர்களும், செக்யூரிட்டிகளும் செல்போன்கள் மூலம் சாமிக்கு செய்யப்படும் அபிஷேகம், பூஜைகளை புகைப்படம் எடுத்தும், செல்பி எடுத்தும் வருகின்றனர். எனவே கோயிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என, கூறி இருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘கோயில்கள் சுற்றுலாத் தலங்கள் இல்லை.

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடைகள் அணியாமல் டீ ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகளை அணிந்து வருவதும் ஏற்புடையது இல்லை.

திருச்செந்தூர் கோயிலின் உள்ளே அர்ச்சகர்களே புகைப்படங்களை எடுத்து அவர்களது சொந்த யூடியூப் சேனலில் பதிவு செய்கின்றனர். தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்கள் என்ன சத்திரமா?

தமிழ்நாட்டில் இருக்கும் கோயில்களில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற நிலை உள்ளது. ஆனால் அதே சமயம் திருப்பதி கோயிலின் வாசலில் ஒரு புகைப்படம் கூட யாரும் எடுத்து விட முடியாது.

எனவே, திருச்செந்தூர் கோயிலின் உள்ளே அர்ச்சகர் உள்பட யாருமே செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதிக்க கூடாது. அதையும் மீறி பயன்படுத்துவோரின் செல்போனை பறிமுதல் செய்ய வேண்டும்.

கோயில் வாசலிலேயே செல்போன்களை டிடெக்டர் வைத்து அனைவரையும் பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டு ஏற்கனவே நீதிபதிகள் பெரும் பரபரப்பை கிளப்பி இருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது திருச்செந்தூர் கோயில் மட்டும் இன்றி அனைத்து கோயில்களில் செல்போன் பயன்படுத்த உடனடியாக தடை விதிக்க வேண்டும் என இந்து சமய அறநிலைய துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டு உள்ளது.

இந்த உத்தரவை நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு பிறப்பித்துள்ள நிலையில் கோயில்களின் மாண்பை பாதுகாக்கும் விதமாக ஆடைகளில் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து கோயிலுக்குள் வரும் பக்தர்கள் மரபினை காக்கும் விதமாக ஆடைகள் அணிந்து வர வலியுறுத்தி, விளம்பரப் பலகை வைக்கப்பட்டு உள்ளது என, திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.