கர்நாடகா: வாலிபர் நடுத்தெருவில் கொடூர கொலை; 3 பெண்கள் உள்பட 6 பேர் கும்பல் வெறிச்செயல்

பெங்களூரு,

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கே.பி. அக்ரஹார பகுதியில் மருந்து கடை ஒன்றின் வெளியே சாலையோரத்தில் அமர்ந்திருந்த 30 வயது வாலிபரை சுற்றி நள்ளிரவில் கும்பல் ஒன்று கூடியிருந்தது.

இந்த நிலையில், அந்த வாலிபரை திடீரென நடுத்தெருவில் தள்ளி அந்த கும்பல் கடுமையாக தாக்கி உள்ளது. இந்த தகராறில், 3 பெண்கள் உள்பட 6 பேர் ஈடுபட்டு உள்ளனர்.

இதில், அந்த கும்பலில் இருந்த ஒரு பெண் ஓடி சென்று, சாலையோரத்தில் கிடந்த பெரிய கல்லை எடுத்து கொண்டு திரும்பி வந்து, வாலிபரின் தலையில் போட்டுள்ளார். தொடர்ந்து, பல முறை வாலிபரை கல்லால் தாக்கியுள்ளனர்.

இதன்பின்னர், அந்த கும்பல் தப்பியோடி விட்டது. வாலிபரின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்தில் வசித்தவர்கள் வந்துள்ளனர். இதன்பின்னர், அவரை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். எனினும், வாலிபர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

ஆள் யாரென்று அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கொடூர கொலையில் கும்பல் ஈடுபட்டு உள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் பாதமி பகுதியை சேர்ந்த பலப்பா ஜம்கண்டி என்பவர் கொல்லப்பட்ட வாலிபர் என அடையாளம் தெரிந்துள்ளது. இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வந்தனர்.

அந்த பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து வரும் குற்றவாளிகளில் ஒருவரான நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மீதமுள்ள 5 பேரை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.