புதுடெல்லி: டிசம்பர் 12-ம் தேதியை யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் தினமாக ஐ.நா. அறிவித்துள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி சென்று சேர வேண்டும் என்பது இதன் நோக்கம் ஆகும். இதையொட்டி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சார்பில், வாரணாசியில் சுகாதாரத் துறை அமைச்சர்கள் மாநாடு நாளை தொடங்குகிறது. இதில், பல்வேறு மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள், முதன்மை செயலாளர்கள், தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர்கள் உட்பட சுகாதாரத் துறையைச் சேர்ந்த 1,200 பேர் பங்கேற்க உள்ளனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் இந்த மாநாட்டை தொடங்கி வைப்பார் என்றும், இரண்டாம் நாள் நிகழ்வில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொள்வார் என்றும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மாநாட்டில், ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கம், சுகாதாரத்துக்கான 15-வது நிதிக் குழு மானியம், காசநோய், மலேரியா, தொழுநோய் ஓழிப்பு, ஜன் ஆரோக்கிய யோஜனா ஆகிய திட்டங்கள் குறித்து கலந்துரையாடல் நடைபெற உள்ளது.