உலகின் இன்னொரு சக்திவாய்ந்த நாடாக திகழும் இந்தியா: வெள்ளை மாளிகை உயரதிகாரி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவின் நட்பு நாடு என்பதை தாண்டி, இந்தியா வல்லரசுகளுக்கு இணையான இன்னொரு சக்திவாய்ந்த நாடாக இருப்பதாக வெள்ளை மாளிகை உயரிதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் அமெரிக்க ஒருங்கிணைப்பாளரும் வெள்ளை மாளிகையின் உயரதிகாரியுமான கர்ட் கேம்பல் வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அமெரிக்கா தனது சக்திக்கு அப்பாற்பட்டு இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது.

இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவையும், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவதையும் மேலும் வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இந்தியா தனித்துவமான நாடு. அது அமெரிக்காவின் அணியில் இருக்கும் நாடாக இருக்காது. சுதந்திரமான, சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் என்ற விருப்பம் இந்தியாவுக்கு இருக்கிறது. அது வல்லரசுகளுக்கு இணையான உலகின் இன்னொரு சக்திவாய்ந்த நாடாக திகழும்.

latest tamil news

ஒவ்வொரு துறையிலும் இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு வளர்ந்து வருகிறது என்பதை நம்புவதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. இந்திய – அமெரிக்க உறவுக்கு லட்சியம் இருப்பதாக நான் நம்புகிறேன்.

விண்வெளி, கல்வி, காலநிலை மாற்றம், தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும் இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகிறது. ஒரே குறிக்கோளுடன் இரு நாடுகளின் பயணம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவுக்கு இணையாக வேறு எந்த ஒரு இருதரப்பு உறவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

இந்தியா – அமெரிக்க உறவு, சீனாவின் அச்சுறுத்தலை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்படவில்லை. அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் அர்ப்பணிப்புணர்வே இந்த நட்பு பாலத்துக்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.