கமல் படம் கைவிடப்படவில்லை : மகேஷ் நாராயணன்

கமல் இயக்கத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற விஸ்வரூபம் படத்திற்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் மகேஷ் நாராயணன். அதை தொடர்ந்து கமலுடன் இணைந்து பயணித்து அவரது நட்பில் இருந்து வருகிறார். அதுமட்டுமல்ல மலையாளத்தில் டேக் ஆப், சீ யூ சூன், மாலிக் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றியும் பெற்றுள்ளார். இந்த நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் நடிக்கும் படம் ஒன்றை மகேஷ் நாராயணன் இயக்குவதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியானது.

அதேசமயம் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன்-2 படம் முழு வீச்சில் துவங்கப்பட்டு அதில் தற்போது கமல் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து எச்.வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கத்திலும் கமல் அடுத்தடுத்து நடிக்க உள்ளார். இதனால் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் நடிப்பதாக சொல்லப்பட்ட படம் கைவிடப்பட்டு விட்டது என்றும் கதையில் ஏற்பட்ட கருத்து மாறுபாடு காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த தகவல்கள் குறித்து மறுப்பு தெரிவித்துள்ள மகேஷ் நாராயணன், இதுபற்றி அவர் அளித்த ஒரு பேட்டியில், “கமலும் நானும் இணையும் படம் கைவிடப்படவில்லை. கமல் இந்த படத்தின் கதையை எழுதி வருகிறார். இந்தியன்-2 படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் கதையை அவர் எழுதி முடித்ததும் இதன் படப்பிடிப்பு துவங்குவது குறித்த விவரங்கள் ஆலோசிக்கப்படும். அதனால் தற்போது பரவும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.