வடக்கு பர்கினா பாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 பேர் பலி

ஒவ்கடங்கு,

ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதில் அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், பர்கினோ பாசோவின் வடக்கே உள்ள போலா பகுதியில் துப்பாக்கி ஏந்திய நபர்கள் சிலர் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் காட்டுமிராண்டித்தனமாக அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் அங்கிருந்த அனைவரும் அலறியவாறு ஓட்டம் பிடித்தனர். இந்த தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

விசாரணையில், ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் பொதுமக்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.