சினிமாவில் 20 ஆண்டுகளைக் கடந்த த்ரிஷா

சினிமாவில் பொதுவாக ஹீரோக்கள்தான் 70 வயதைக் கடந்தாலும் ஹீரோவாக நடித்துக் கொண்டு 20 வயது ஹீரோயின்களுடன் இன்னமும் டூயட் பாடுவார்கள். அதே சமயம் ஒரு ஹீரோயின் 30 வயதைக் கடந்தாலோ, அல்லது திருமணம் ஆகிவிட்டாலோ அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள். அக்கா, அண்ணி, அம்மா வேடங்களை மட்டுமே கொடுப்பார்கள்.

இந்தக் காலத்தில் அதெல்லாம் கொஞ்சம் மாறியிருக்கிறது. 30 வயதைக் கடந்தவர்களும், திருமணமானவர்களும் வெற்றிகரமான ஹீரோயின்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இப்போதுள்ள போட்டியில் ஒரு ஹீரோயின் 20 ஆண்டுகள் கடப்பது மிகவும் பெரிய விஷயம். அப்படி ஒரு சாதனையைச் செய்திருக்கிறார் நடிகை த்ரிஷா.

2002ம் ஆண்டு அமீர் இயக்கத்தில், சூர்யா நடித்து வெளிவந்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. அதன்பின் தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி ஹீரோக்களுடன் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இந்தாண்டு வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில் 'குந்தவை' கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்களையும் பெற்றார்.

மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தலா ஒரு படங்களில் நடித்து வருகிறார். தற்போது மலையாளத்தில் 'ராம்' என்ற படத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்து வருகிறார். தமிழில் அவர் நடித்த முடித்த 'கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி' ஆகிய படங்கள் இன்னும் வர வேண்டி உள்ளது. 'த ரோட்' என்ற படத்தில் முதன்மைக் கதாநாயகியாக தற்போது நடித்து வருகிறார்.

20 ஆண்டு பயணம் குறித்து, “எனது அன்புள்ள த்ரிஷாயன்ஸ், உங்களில் நானும் ஒருவராக இருப்பது குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன். 'நமக்கு' என்றென்றும் வாழ்த்துகள். நமது முன்னோக்கிய பணத்திற்கு இன்றும் ஒவ்வொரு நாளும் நீங்கள் செய்யும் அனைத்திற்கும் நன்றி,” என தனது ரசிகர்களையும், தன்னையும் ஒன்றாகக் குறிப்பிட்டு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் த்ரிஷா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.