திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் கம்பெனிகளில் தமிழகத்தில் இருந்து பல மாவட்டங்களில் உள்ள ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களும், வடமாநிலத்தை சேர்ந்த பல தொழிலாளர்களும் பணி புரிந்து வருகின்றனர்.
இந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களில் பெரும்பாலான தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்களிலும் மற்ற தொழிலாளர்கள் சுற்றியுள்ள இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்தும் தங்கி வேலைக்கு சென்று வருகின்றனர்.
இதில், திருப்பூர் மாவட்டம் வீரபாண்டி, பலவஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் தங்கியிருந்து பணிக்கு செல்லும் இளம்பெண்கள் பலர் உடல்நிலை பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.
தொடர்ந்து பெண் தொழிலாளர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் உடல்நிலை பாதிக்கப்பட்ட பெண்களிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையின் போது, அவர்கள் அனைவரும் கருக்கலைப்பு மாத்திரைகளை பயன்படுத்தியதன் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தது தெரியவந்தது.
தவறான உறவால் கர்ப்பமான இளம்பெண்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி பயன்படுத்தியுள்ளனர்.
பொதுவாக மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் அந்த விதிமுறையையும் மீறி திருப்பூர் மாநகரில் உள்ள சில மருந்துக்கடைகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ரூ.1000, ரூ.1500 என்று கூடுதல் விலைக்கு கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்துள்ளது.
அதன் பின்னர், திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி தலைமையிலான மருத்துவத்துறை அதிகாரிகள் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி மற்றும் பல்லடம் சாலை உள்பட மாநகர் பகுதியில் உள்ள மருந்துக்கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இதில் சில மருந்துக்கடைகளில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் உடனடியாக பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனகராணி தெரிவித்ததாவது, “மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் கருக்கலைப்பு மாத்திரைகள் வழங்கக்கூடாது. அதனை பெண்களும் பயன்படுத்தக்கூடாது.
அவ்வாறு பயன்படுத்துவதால் உடல் உபாதைகள் ஏற்படும். ஆகவே அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல், கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்யும் மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தேவைபட்டால் காவல்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றுத் தெரிவித்தார்.