வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சாட்டோகிராம்: வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி, 512 ரன்கள் முன்னிலையுடன் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து 513 ரன் என்ற இமாலய இலக்குடன் ஆடிய வங்கதேசம் 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்தது. இந்திய வீரர்கள் சுப்மன் கில், புஜாரா சதம் விளாசினர்.
வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் சாட்டோகிராமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 404 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய வீரர்கள் ஸ்ரேயாஸ் ஐயர், புஜாரா, அஸ்வின் ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். பின்னர் விளையாடிய வங்கதேச அணி 2வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று (டிச.,16) 3ம் நாள் ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அந்த அணி 150 ரன்னுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். 254 ரன்கள் முன்னிலை பெற்றும் ‛பாலோ ஆனை’ கொடுக்காமல் இந்திய அணி 2வது இன்னிங்சை விளையாடியது. துவக்க வீரர் ராகுல் 23 ரன்னில் வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில், புஜாரா ஜோடி நிலைத்து நின்று ஆடியது. 10 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் விளாசிய சுப்மன் கில் 110 ரன்னில் அவுட்டானார்.
புஜாராவும் தன் பங்கிற்கு சதம் விளாச, இந்திய அணி 2வது இன்னிங்சை 2 விக்கெட் இழப்பிற்கு 258 ரன் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. புஜாரா 102 ரன்னும், கோஹ்லி 19 ரன்னும் எடுத்திருந்தனர். இதனையடுத்து 513 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. ஆட்டநேர முடிவில் அந்த அணி, விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. வங்கதேச அணியின் வெற்றிக்கு இன்னும் 472 ரன்கள் தேவைப்படும் சூழலில், 2 நாட்கள் முழுதாக இருப்பதால், இந்திய பந்துவீச்சாளர்கள் வெற்றியை இந்தியாவின் வசம் ஆக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

52 இன்னிங்ஸ் பிறகு…
இந்த போட்டியில் சதம் விளாசிய இந்திய வீரர் புஜாரா, 52 இன்னிங்ஸ்க்கு பிறகு (1,443 நாட்களுக்கு பிறகு) சதம் அடித்து அசத்தியுள்ளார். 130 பந்துகளில் சதம் அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிவேக சதத்தையும் பதிவ செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement