மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டமானது கடந்த 2016-ம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டு, அவரது பிறந்த தினமான 24-2-2016 அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதனடிப்படையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் 60 வயது நிறைவு மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றின் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் அனுகி, மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் 3 மாதங்களுக்கு பயன் படுத்துகின்ற வகையில் கட்டணமில்லா பயனர் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது, அடுத்த அரையாண்டில் ஜூன் 2023 வரை பயன்படுத்தக்கூடிய டோக்கன் வழங்கப்படவுள்ளது.
ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை 40 மையங்களில் வரும் 21ம் தேதி முதல் 31 ஜனவரி வரை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர், பிப்ரவரி 1ம் முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.
கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம் அல்லது கல்வி சான்றிதழ் அல்லது வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும். சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும். மேலும், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம் மட்டும் கொண்டு வர வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.