ஆருத்ரா மோசடி வழக்கில் கைது படலம் தீவிரம்; கோவை இளைஞர் சிறையிலடைப்பு!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மாநிலம் முழுவதும் ‘தங்கத்தில் முதலீட்டுத் திட்டம்’ அறிவித்து ரூ.2,438 கோடியை மோசடி செய்த ‘ஆருத்ரா’ நிதி நிறுவன அதிபர்களைத் ‘தேடப்படும் குற்றவாளிகளாக’ அறிவித்திருக்கிறது தமிழக காவல் துறை.

இந்த மோசடிப் பேர்வழிகள் குறித்து துப்பு கொடுத்தால், ரொக்கப் பரிசாக சன்மானம் வழங்கப்படும் எனவும் காவல்துறை அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

ஆருத்ரா கோல்டு நிறுவனம்

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆருத்ராவில் மட்டும் 1,09,255 பேர் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றமடைந்திருக்கிறார்கள். குறிப்பாக, இந்த நிறுவனம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் போன்ற மாவட்டங்களில்தான் அதிகம் கைவரிசைக் காட்டியிருக்கிறது.

இந்த பெரும் மோசடி தொடர்பாக, ஏற்கெனவே சிலர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், அவர்களில் நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்திருப்பதுடன் மோசடியில் தொடர்புடைய அனைவரையும் பிடிக்க தீவிரம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.

இந்த நிலையில் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அய்யப்பன் என்பவரையும் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்திருக்கிறார்கள். இவர், ஆருத்ரா நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இந்த நபர், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

ஆருத்ரா கோல்டு நிறுவனம்

ஆருத்ரா மோசடியில் அடுத்தடுத்து நபர்கள் கைது செய்யப்படும் நிலையில், ஐ.எஃப்.எஸ் நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாதது ஏன் என்று கேட்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். ஆருத்ராவினால் பணம் போட்டு பாதிக்கப்பட்டவர்கள் மட்டும்தான் மக்களா, ஐ.எஃப்.எல்-ல் பணம் போட்டு பாதிப்படைந்தவர்கள் மக்கள் இல்லையா மக்கள் எழுப்பும் கேள்விக்கு அரசின் பதில் என்ன?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.