கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; வீடுகள் குலுங்கின, ஜன்னல்கள் உடைந்தன

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு பகுதியில் ஹம்போல்ட் கவுன்டி பகுதியில் யுரேகா என்ற இடத்திற்கு அருகே இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 16.1 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

பெர்ன்டேல் என்ற பகுதியில் இருந்து மேற்கே-தென்மேற்கே 7.4 மைல்கள் பரப்பளவிற்கு நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கானோரின் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

கலிபோர்னியாவில் நிலநடுக்கம் அவ்வப்போது ஏற்படுவது வழக்கம் என நிலநடுக்கவியலாளர்கள் கூறுவதுடன், அடுத்த 30 ஆண்டுகளில் பரவலாக பேரழிவை ஏற்படுத்த கூடிய நிலநடுக்கம் ஏற்படுவது ஏறக்குறைய நிச்சயம் என்றும் எச்சரித்து உள்ளனர்.

இந்நிலநடுக்கம் எதிரொலியாக வீடுகளின் ஜன்னல்கள் உடைந்து சிதறியுள்ளன. வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தூக்கி எறியப்பட்டன. சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்த சரக்குகள் சிதறி கிடந்தன.

இதுபற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்து உள்ளன. சிறிய அளவிலான 10-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களும் பின்னர் உணரப்பட்டு உள்ளன. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.