நாகப்பட்டினம்: தென்மேற்கு வங்கக்கடலில் சூறாவளி காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் நேற்று முதல் மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லக்கூடாது என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலுக்கு மீனவர்கள் செல்வதற்கான டோக்கன் வழங்கவில்லை. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஒரு லட்சம் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. 700 விசைப்படகு, 3,500 பைபர் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார், கொள்ளிடம், பழையாறில் கடல் சீற்றம் காரணமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 6,500 மீனவர்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் மீனவர்களும், புதுக்கோட்டை காரைக்கால் மாவட்டத்திலும் கடலுக்கு செல்லாமல் மீனவர்கள் வீடுகளிலேயே முடங்கினர். டெல்டா மாவட்டங்களில் கடலில் சீற்றம் அதிகமாக உள்ளதால் 1.30 லட்சம் மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.