சீனாவை கதறவிட்ட 'BF.7' கொரோனா தொற்று… இந்தியாவுக்கும் வந்துவிட்டது – அடுத்தது என்ன?

ஒமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை,  கொரோனா தொற்றால் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் அவை பதிவாகியிருப்பதாகவும் குஜராத் சுகாதாரத்துறை தற்போது  உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது முழுமையாக குணமடைந்துள்ளனர். மேலும், BF.7 தொற்றால் ஒடிசாவிலும் இரண்டு பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BF.7 என்பது ஓமிக்ரான் தொற்றுவகையான BA.5இன் துணை வகையாகும். மேலும் இது அதிக அளவில் பரவக்கூடியது. தனிமையில் இருப்போர் மற்றும் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கும் கூட நோய்த்தொற்று அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் அதிக திறன் கொண்டதாக இருப்பதால் வலுவான தொற்றுத் திறனைக் கொண்டுள்ளது என BF.7 குறித்து வல்லுநர்கள் கூறுகின்றனர். 

சீன தலைநகர் பெய்ஜிங் உட்பட நகரங்களில் அதிக கரோனா பரவல், ‘குறைந்த அளவிலான நோய் எதிர்ப்பு சக்தி’ ஏற்பட காரணமாக இருக்கலாம் என்றும் ஒருவேளை முந்தைய நோய்த்தொற்றுகளால் கூட அவை ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 

அனைத்து கோவிட்-பாசிட்டிவ் வழக்குகளின் மாதிரிகளை INSACOG (Indian SARS-CoV-2 Genomics Consortium) மரபணு வரிசைமுறை ஆய்வகங்களுக்கு அனுப்புமாறு மத்திய அரசு மாநிலங்களை கேட்டுக் கொண்டுள்ளது. INSACOG என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு கொரோனா தொற்றுவகையை ஆராயவும், கண்காணிக்கவும் சுகாதார அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அமைப்பாகும். இது அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயலாற்றுகிறது. 

சர்வதேச பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நேற்று (டிச. 21) முதல் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் தொடங்கப்பட்டது. இதனை கண்டு அச்சப்பட தேவையில்லை எனவும்,  கூட்ட நெரிசலான பகுதிகளில் மட்டும் பொதுமக்கள் முகமூடி அணிந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஒவ்வொரு வாரமும் கொரானா தொற்று நிலைமையை கண்காணிக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது பொதுக்கூட்டங்கள் அல்லது சுற்றுலா தலங்களுக்கு கொரோனா நெறிமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஜூன் மாதத்தில் மத்திய அரசின் ஆலோசனைக்குப் பிறகு எந்த மாநிலத்திலும் முகக்கவசம் கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டது. விமான நிலையங்களிலும் முகமூடிகள் கட்டாயம் இல்லை, ஆனால் நவம்பர் மாதம் அனுப்பப்பட்ட ஆலோசனையில் சமூக இடைவெளி அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக, நேற்று காலை மருத்துவ வல்லுநர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா,”கோவிட் இன்னும் முடிவடையவில்லை. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். எந்த சூழ்நிலையையும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார். 

நேற்றைய நிலவரப்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 129 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. மேலும், தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 3,408 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவிற்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.