பிஎப்7 கொரோனா: நாடாளுமன்றத்தில் மாஸ்க் அணிந்த எம்.பி.க்கள்!

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, சீனாவில் அதிவேகமாக பரவி வரும் பிஎப்7 (BF.7) வகை கொரோனா மாறுபாடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய கொரோனா மாறுபாடு தடுப்பூசியின் நிலையைப் பொருட்படுத்தாமல் வேகமாக பரவி வருவதாகவும், இதன் வீச்சு அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இந்தியாவை பொறுத்தவரை பிஎப்7 ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று குஜராத்தில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த அக்டோபரில் இந்த வகை வைரஸ் தொற்று முதன்முதலாக குஜராத்தில் கண்டறியப்பட்டதாகவும், இதுவரை குஜராத்தில் 3 பேருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு இந்த வகை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டேவியா தலைமையில் கொரோனா பரவல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா பரவல் வேகமாக பரவும் சூழல் உள்ளதால், விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அப்போது அவர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக, புதிய வகை கொரோனா பரவல் இந்தியாவில் ஏற்படாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி உயர் அதிகாரிகளுடன் இன்று மதியம் ஆலோசனை நடத்துகிறார்.

இந்த நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளிலும் உறுப்பினர்கள் முகக்கவசம் அணிந்து பங்கேற்றுள்ளனர். கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், அவையில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவை உறுப்பினர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டுள்ளார். முகக்கவசம் அணிந்து மக்களுக்கு உதாரணமாக எம்.பி.க்கள் திகழ வேண்டும் எனவும் ஜெக்தீப் தன்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதனிடையே, புதிய வகை
கொரோனா வைரஸ்
பிஎப்7 அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர், டிசம்பர் 7ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் 29ஆம் தேதி வரை மொத்தம் 17 அமர்வுகளாக இந்த கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.