பெர்லின்: ஹிட்லரின் நாஜி முகாம்களில் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட உடந்தையாக இருந்ததாக, 97 வயது மூதாட்டிக்கு தற்போது சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ஹிட்லர் தலைமையிலான ஜெர்மானிய நாஜி அரசு, இரண்டாம் உலகப் போரின்போது தாங்கள் ஆக்கிரமித்த போலந்தின் தென்பகுதியில் ஆஸ்விட்ச் என்கிற சிறிய ஊரில் ராணுவ முகாமைத் திறந்தது. அதனை தங்களால் பிடிக்கப்படும் எதிரி நாட்டவர்களை அடிமைகளைப் போல் நடத்தி வேலை வாங்கவும், சித்ரவதை செய்யவும் பயன்படுத்தினர்.
போரில் ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் தாங்கள் கைதுசெய்த யூதர்கள் அனைவரையும் வதைமுகாமில் நச்சுவாயுவைப் பயன்படுத்திக் கொன்றது . விஷவாயுதான் என்றில்லாமல் அடித்துக் கொல்வது, சித்ரவதை செய்து கொல்வது, சுட்டுக் கொல்வது, கூர்மையான ஆயுதங்களால் கொலைகள் நடந்தேறியது. வரலாற்றின் கருப்புப் பக்கங்களாகவே அறியப்படுகின்றன.
நாஜி முகாமில் நடந்த படுகொலைகள் தொடர்பாக வழக்குகள் ஜெர்மனியில் அவ்வப்போது நடத்தப்பட்டு, அதற்கு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நாஜி முகாமில் 1943 முதல் 1945 வரை தட்டச்சு செயலராக பணிபுரிந்த 97 வயதான இம்கார்ட் ஃபியூஷ்னர் என்பவர், அங்கு நடந்த 10,000 கொலைகளுக்கு உடந்தையாக இருந்தார் என்று கூறி அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், நீதிமன்றதால் இம்கார்ட் ஃபியூஷ்னர் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. முகாமில் பணிபுரியும்போது இம்கார்ட் தனது பதின் பருவத்தில் இருந்ததால், சிறார் தண்டனை சட்டப்படி அவருக்கு குறைந்த சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.