தமிழக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை ஒத்திகை நடத்த உத்தரவு

சென்னை: பல்வேறு நாடுகளிலும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது.

சீனா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளில் 2 சதவீதத்தினருக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளும் கரோனா தொற்றை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மருத்துவத் துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மருத்துவ கல்வி இயக்குநர், அனைத்து மருத்துவக் கல்லுரிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

  • சோதனை செய்ய அடுத்த ஆறு மாதங்களுக்கு தேவையானவற்றை மதிப்பீடு செய்து முன்கூட்டியே வாங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • தினசரி மருந்துகளின் பயன்பாடு மற்றும் மருந்துகளில் இருப்பை தெரிவிக்க வேண்டும்
  • டிச.30-ம் தேதிக்குள் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை ஒத்திகையை நடத்த வேண்டும்.
  • ஆக்சிஜன் செறிவூட்டிகள் உயிரியல் மருத்துவ பொறியாளர்களிடம் சரிபார்க்க வேண்டும்.
  • பயன்படுத்தப்படாத செறிவூட்டிகள் பாதுகாப்பான இடத்தில் சேமிக்கப்பட வேண்டும்.
  • ஆக்சிஜன் சிலிண்டர்கள் அவசர கால பயன்பாட்டிற்கு தயார் நிலையில் வைக்க வேண்டும்.
  • முகக்கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளின் தேவையை மதிப்பீடு செய்யப்பட வேண்டும்
  • தடுப்பூசி மையங்கள் முழு பணியாளர்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
  • தனிக் குழு தினசரி படுக்கை எண்ணிக்கை மற்றும் ஆக்சிஜன் இருப்பை ஆய்வு செய்ய வேண்டும்.
  • கரோனா சோதனை வசதியை அதிகரித்து, உடனடியாக முடிவுகளை அளிக்க வேண்டும்.
  • மருத்துவமனைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மூத்த செவிலியர் ஆய்வு செய்ய வேண்டும்.

இதனிடையே, மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் நோயாளிகளின் உதவியாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி அனைத்து மருத்துவப் பணியாளர்களும் மருத்துவமனையில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ மாணவர்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும், மருத்துவக் கல்லூரிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், உதவியாளர்கள் மாஸ்க் அணிந்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், உதவியாளர்களுக்கு கரோனா வார்டுக்குள் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.