திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் மறைந்த பொது செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் கலைஞர் பிறந்த ஊரான நாகை மாவட்டம் திருக்குவளை கடைத்தெருவில் நேற்று (ஜன. 6) நடைபெற்றது.
தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் மற்றும் திமுக நாகை மாவட்ட செயலாளர் கௌதமன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் மற்றும் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றனர்.
‘வடநாட்டு கும்பல்’
கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசுகையில்,”கலைஞர் மற்றும் பேராசிரியர் இல்லாத நேரத்தில் திமுகவை பார்த்து சவால் விடும் அளவிற்கு வடநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு தைரியம் வந்துவிட்டது” என்றார்.
தொடர்ந்து, பானிபூரி விற்ற வடநாட்டு கும்பல் தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற துடிப்பதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து பேசிய அவர்,”வடநாட்டில் பிழைப்புக்காக தமிழகம் வந்த கும்பல், திராவிடம் என்றால் என்ன என்று தற்போது கேள்வி எழுப்புகிறது. பேராசிரியர் மற்றும் கலைஞர் ஆகியோர் இல்லை என்று நினைத்து சிலர் திமுகவிற்கு சவால் விடுகிறார்கள்.
பத்து பேராசிரியர் மற்றும் பத்து கலைஞருக்கு சமமாக செயல்படுகிறார் தற்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆளுநர் மாளிகையில் அமர்ந்திருக்கும் வடநாட்டுகாரர் தற்போதைய ஆளுநர், தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என்று சொல்கிறார். தமிழ்நாடு என்ற பெயரை பெறுவதற்கு திமுக கடுமையாக உழைத்து இருக்கிறது” என்றார்.
ஆளுநர் சர்ச்சை
முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என அழைப்பதை விடுத்து தமிழகம் என அழைப்பது சரியாக இருக்கும் என தெரிவித்திருக்கும் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் கடந்த ஜன. 4ஆம் தேதி நடைபெற்றது. இதில் பேசிய அவர், இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கு கட்சி மாறுபாடுகளை கடந்து அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து, ‘தமிழ்நாடு‘ என்ற ஹேஷ்டேக் டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ளது. அந்த பதிவுகளில் ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மேலும் படிக்க | ஆளுநரின் கோபம் இல்லை; பாரம்பரிய கோபம் – முரசொலி பதிலடி