வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்: டிஜிபி உத்தரவு!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட இறையூர் கிராமத்தின் வேங்கைவயல் தெருவில் பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதி மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக வேங்கை வயலில் பத்தாயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் மர்ம நபர்கள் சிலர் மலம் கலந்துள்ளனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டபோது, அங்குள்ள கோயிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாடு உரிமை மறுக்கப்பட்ட விவகாரம், இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் ஆதிதிராவிட மக்களை அழைத்து கோயிலில் வழிபாடு செய்ய நடவடிக்கை எடுத்தார். மேலும், இரட்டை குவளை முறையை பின்பற்றிய டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை பொறுத்தவரை பல கிராமங்களிலும் இதுபோன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வரும் நிலையில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக, 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விவகாரம் தொடர்பாக விசாரிக்க திருச்சி சரக டிஐஜி தரப்பில் ஏடிஎஸ்பி ரமேஷ் கிருஷ்ணா தலைமையில் 11 பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 70 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில், வேங்கைவயலை சேர்ந்த 20 பேர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பாக, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், புதுக்கோட்டை வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. புதுக்கோட்டை வெள்ளனூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி, டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.