திருவள்ளுவர் தினத்தில் இறைச்சி கூடங்கள் மூடல்; கடைகளுக்கு அனுமதி: சென்னையில் மக்கள் குழப்பம்

சென்னை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இறைச்சி கடைகள் செயல்படுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி முறையான அறிவிப்பு வெளியிடாத காரணத்தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மது மற்றும் இறைச்சிகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும். இதன்படி இந்த ஆண்டு திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் அனைத்து மூடப்பட்டு இருந்தது. ஆனால், இறைச்சி கடைகள் செயல்படுவது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் எந்த வித முறையான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதன் காரணமாக பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

சென்னையில் பல்வேறு இடங்களில் இறைச்சி கடைகள் திறந்து இருந்தாலும், இறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவியது. இது குறித்து இறைச்சி கடை உரிமையாளர்கள் கூறுகையில், “திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு இறைச்சி வெட்டும் இறைச்சி கூடங்களை மூட மாநகராட்சி உத்தரவிட்டது. ஆனால், இறைச்சி விற்பனை செய்யும் கடைகள் தொடர்பாக எந்த அறிவிப்பும் மாநகராட்சி வெளியிடவில்லை. இதன் காரணமாக குறைவான அளவு இறைச்சி மட்டுமே கிடைத்தது” என்றனர்.

இது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை ஊழியர் ஒருவரிடம் கேட்டபோது, “திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னையில் இறைச்சி வெட்டு கூடங்களை 16-ம் தேதி மூட வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதன்படி இறைச்சி கூடங்கள் மூடப்பட்டது. ஆனால், இறைச்சி கடைகளின் செயல்பாடு தொடர்பாக எந்த உத்தரவும் மாநகராட்சியிடம் வரவில்லை” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.